சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.20 திருக்கோளிலி (திருக்குவளை) பண் - நட்டராகம் |
நீள நினைந்தடி யேனுமை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
அட்டித் தரப்பணியே.
|
1 |
வண்டம ருங்குழ லாளுமை
நங்கையோர் பங்குடையாய்
விண்டவர் தம்புர மூன்றெரி
செய்தவெம் வேதியனே
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை
அட்டித் தரப்பணியே.
|
2 |
பாதியோர் பெண்ணைவைத் தாய்பட
ருஞ்சடைக் கங்கைவைத்தாய்
மாதர்நல் லார்வருத் தம்மது
நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடை சூழ்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புத னேயவை
அட்டித் தரப்பணியே.
|
3 |
சொல்லுவ தென்னுனை நாண்தொண்டை
வாயுமை நங்கையைநீ
புல்கி இடத்திலவைத் தாய்க்கொரு
பூசல்வெய் தாருளரோ
கொல்லை வளம்புற விற்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அல்லல் களைந்தடி யேற்கவை
அட்டித் தரப்பணியே.
|
4 |
முல்லை முறுவல் உமையொரு
பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலை யிற்பலி
கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புற விற்றிருக்
கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடி யேற்கவை
அட்டித் தரப்பணியே.
|
5 |
குரவம ருங்குழ லாளுமை
நங்கையோர் பங்குடையாய்
பரவை பசிவருத் தம்மது
நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில் சூழ்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அரவ மசைத்தவ னேயவை
அட்டித் தரப்பணியே.
|
6 |
எம்பெரு மானுனை யேநினைந்
தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழ லாளொரு
பாகம மர்ந்தவனே
செம்பானின் மாளிகை சூழ்திருக்
கோளிலி எம்பெருமான்
அண்பது வாயடி யேற்கவை
அட்டித் தரப்பணியே.
|
7 |
அரக்கன் முடிகரங் கள்அடர்த்
திட்டவெம் மாதிபிரான்
பரக்கும் அரவல்கு லாள்பர
வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதி கொள்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
இரக்கம தாயடி யேற்கவை
அட்டித் தரப்பணியே.
|
8 |
பண்டைய மால்பிர மன்பறந்
தும்மிடந் தும்மயர்ந்துங்
கண்டில ராயவர் கள்கழல்
காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை
அட்டித் தரப்பணியே.
|
9 |
கொல்லை வளம்புற விற்றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பர வுந்திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்ட டிநினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துல கின்அண்டர்
வானுல காள்பவரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |